தனியார் பள்ளி கல்வி கட்டணம் – நீதிபதி தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் எம்.எஸ்.எம்.முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார் இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாததால் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றி தேர்ச்சி வழங்கப்பட்டது. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி கொண்டு இருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்ததால், இந்நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகள் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன.
அதே போல 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. 5 முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வந்தன. பல பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா தொற்றால் பாதிப்பு ஏற்பட்டதால், மார்ச் மாதம் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.
பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் நீடித்து வந்த நிலையில், 110வது விதியின் கீழ் 9,10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டை போல தேர்வுகள் இன்றி தேர்ச்சி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் தனியார் பள்ளிகள் ஜூன் முதல் வாரம் முதல் ஆன்லைன் வகுப்புகளை துவக்கி உள்ளன.
ஆன்லைன் வகுப்பு தொடங்குவதற்கு முன்பாகவே கடந்த மே மாதம் பள்ளிகட்டண விபரத்தை பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைத்த தனியார் பள்ளிகள், ஆன்லைன் வகுப்பு தொடங்கி 1 வாரத்தில், மாணவர்கள் கல்வி கட்டணத்தை முழுமையாக கட்ட சொல்லி வற்புறுத்தி வருகின்றனர். அப்படி கல்வி கட்டணம் கட்ட கால அவகாசம் கோரும் மாணவர்களுக்கு புத்தகம், ஆன் லைன் வகுப்பு லிங் போன்றவற்றை தராமல் தனியார் பள்ளிகள் கறார் காட்டி வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால் பொதுமக்கள் வேலைக்கு செல்லமுடியாமல் கடும் நிதி நெருக்கடி சந்தித்து வரும் நிலையில், தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் என்ற பெயரில், டியூசன் கட்டணம், பள்ளிக்கு நன்கொடை என பல வகையில் கட்டண கொள்ளையில் தனியார் பள்ளிகள் ஈடுபட தொடங்கிவிட்டன.
இதனால் மாணவ செல்வங்களின் பெற்றோர்கள் மிக பெரும் நெருக்கடிக்கு தனியார் பள்ளிகளால் ஆளாக்கப்பட்டு வருகின்றனர். தனியார் பள்ளிகளின் இந்த கொடிய செயலில் இருந்து பெற்றோர்களை காக்கும் வண்ணம், தனியார் பள்ளி கல்வி கட்டண ஒய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். விதிமுறை மீறி கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
அப்படி தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யும் போது, அந்த பள்ளிகளை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என அறிக்கை விடுத்துள்ளார்..