சாதித்துக் காட்டிய வணிகர் மாரிசாமி! 3 ஆம் வகுப்பில் 3 முறை தோல்வி தோல்வியடைந்தவர்!!

தமிழகம் வணிகம்

சாதித்துக் காட்டிய
வணிகர் மாரிசாமி!

3 ஆம் வகுப்பில்
3 முறை தோல்வி
தோல்வியடைந்தவர்!!

சென்னை, தி. நகரில் 22.06.19 அன்று நடைபெற்ற த. ப. வ(முதல் குழு) வின் 206 வது வாரக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வணிக பிரமுகர் திரு. பி. மாரிசாமி உரையாற்றுகையில் பேசியதாவது:

“தூத்துக்குடி மாவட்டம் பனையூர் என் சொந்த
ஊர். மிகவும் கஷ்டமான பொருளாதார சூழ்நிலையில் வளர்ந்தேன். வாழ்வாதாரம் தேடி என் பெற்றோர் அடிக்கடி ஊர் மாறியதால், மூன்றாவது வகுப்பில் மூன்று முறை பெயிலாகி படித்தேன். அந்த வகுப்பை கடைசிவரை தாண்ட முடியவில்லை.

1978 – ல் சென்னைக்கு வந்து, மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு கடையில் மாதம் ரூ 20 ரூபாய்க்கு வேலை பார்த்தேன். படிப்படியாக வளர்ந்து, ரூபாய் 500 முதலீட்டில் சொந்தமாக மளிகை கடை வைத்து முன்னேறினேன்.

இப்போது செங்கல்பட்டில் PMS&SONS REAL ESTATE & OLD IRON MERCHANT என்ற பெயரில் வணிகம் செய்து வருகிறேன். மனநிறைவுடன் வாழ்கிறேன். என் மூன்று மகன்களும் மகளும் நன்கு படித்து நல்ல நிலையில் உள்ளார்கள். ஒரு மகன் அமெரிக்காவில் உள்ளார். அங்கு சென்ற போது “நான் படிக்காதவன்” என்று சொல்லித்தான் விசா வாங்கினேன்.

வணிகத்திலும் வாழ்க்கையிலும் என்னை ஜெயிக்க வைத்தது நான் கடைபிடித்த “நாணயம்” தான்.

வறுமையான குடும்பச் சூழலில், மூன்றாம் வகுப்பு வரை நான் படித்த பனையூர் பள்ளிக்கூடத்துக்கு தற்போது செயலாளராக உள்ளேன். அண்மையில் அங்கு நான் சென்றிருந்தபோது, எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் தன் “பென்ஷன்” தொடர்பாக என்னிடம் அனுமதி கையெழுத்து வாங்க வந்திருந்தார்.அவருக்கு கையெழுத்து போட்டுக் கொடுத்து விட்டு அவர் காலில் விழுந்து வணங்கினேன். (கண் கலங்கினார்).

என்னிடம் வேலை பார்த்த பலர் இன்றைக்கு கோடீஸ்வரர்களாக உள்ளார்கள். அதேசமயம், ‘டியூப்லைட்’ க்குள் பணம் பதுக்கி சிக்கிக்கொண்ட ஊழியர்களும் இருந்தார்கள். அப்படிப்பட்டவர்கள்
வெற்றி பெற்று நான் பார்க்கவில்லை என்றார் திரு மாரிசாமி. (9894285127)

– வீ-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *