வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது!!
சென்னை ஆகஸ்ட் 14 வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை பலம் அடைந்தால் தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும். இதனைத் தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் 5-வது முறையாக பலத்த மழை பெய்ய உள்ளது. குறிப்பாக வெள்ளம் வடிந்து நிவாரணப் பணிகள் நடைபெறும் கேரளாவில் இந்த மழை மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக மூணாறு, வயநாடு பகுதிகளிலும், கர்நாடக மாநிலம் சிக்மங்களூர், குடகு ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை இருக்கும். இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு தொடர்ந்து அதிக நீர்வரத்து இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையில் மகாராஷ்டிராவில் இருந்து கன்னியாகுமரி வரை வரும் 18-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை ஒரு வாரத்திற்கு பலத்த மழை பெய்யும் என்று வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் வால்பாறை, நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஆகிய இடங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்.
பவானிசாகர் அணை முழு கொள்ளவை எட்டும், அதேபோல பெரியாறு, பாபநாசம் அணைகளும் வேகமாக நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது