சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று இந்திய சுதந்திர தின விழாவில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கு முதலமைச்சரின் நல் ஆளுமை விருது
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையில் புதியதாக துவக்கப்பட்ட தாய் திட்டத்திற்கு முதலமைச்சரின் நல் ஆளுமை விருது. இத்திட்டத்தில் விபத்துகளுக்கான சிகிச்சை சாலைப் போக்குவரத்து விபத்துகள் உட்பட, மாரடைப்பிற்கான சிகிச்சை, பக்கவாதத்திற்கான சிகிச்சை, தீக்காயம், நச்சு முறிவு மற்றும் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை என்று ஆறு முக்கிய கூறுகள் உள்ளன.
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அனைத்து மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகள், நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சில அரசு மருத்துவமனைகள் உட்பட 75 மருத்துவமனைகள் தாய் திட்ட மருத்துவ நிலையங்களாக அறிவிக்கப்பட்டு, அம்மருத்துவமனைகளில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. நோயாளிகள் மருத்துவமனைக்கு வரும் முன்னரே அவரது நிலை குறித்து மருத்துவமனைக்கு முன்னறிவித்தல், அவசர சிகிச்சை தேவைப்படுபவரை வகைப்படுத்துதல், முதலாவது ஆய்வு, மீளவுயிர்ப்பித்தல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய செயல்பாடுகளில் உள்ளடங்கியவைகள் ஆகும்.
நோயாளிகள் மருத்துவமனைக்கு வரும் முன்னரே அவரது நிலை குறித்து மருத்துவமனைக்கு முன்னறிவித்தல் மூலம் மருத்துவமனை ஊழியர்கள் தயார் நிலையில் இருந்து தாமதமின்றி சிகிச்சையை ஆரம்பிக்க முடியும்.
நோயாளியின் அவசர நிலையைக் கருதி, அவரை சிவப்பு, மஞ்சள், பச்சை என்று வகைப்படுத்துவதன் மூலம், உடனடி சிகிச்சை தேவைப்படுவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதலாவது ஆய்வு, மற்றும் மீளவுயிர்ப்பித்தல் மூலம் நோயாளியின் மூச்சு, இரத்த ஒட்டம் ஆகியவை ஆராயப்பட்டு சீராக்கப்படுகின்றன.
இத்திட்டம், சென்னை அரசு பொது மருத்துவமனையில் முன்னோடித் திட்டமாக ஜனவரி 2018 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தாய் திட்டத்தின் செயல்பாடுகள் காரணமாக, இந்த மருத்துவமனையில், *விபத்தினால் மரணம் அடைந்தவர்களின் விழுக்காடு 8.3-லிருந்து 5.6-ஆக குறைந்துள்ளது.
மேலும் அவசரகால ஊர்திகளை கணினி செயலிகளின் துணையுடன் விபத்து நடந்த இடத்திற்கு அல்லது நோயாளியின் இருப்பிடத்திற்கு அனுப்புவதன் மூலம் அழைப்பு வந்த நேரத்திலிருந்து நோயாளி இருக்குமிடத்திற்கு *108 அவசரகால ஊர்த்தி சென்றடையும் நேரம் 11 நிமிடங்களிலிருந்து 8.36 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.