மே 17 இயக்கம் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.!!

சென்னை

தமிழீழத்தில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலையின் 16ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, மே 18, 2025 ஞாயிறு மாலை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மே பதினேழு இயக்கம் சார்பாக நினைவேந்தல் நடைபெற்றது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். நிகழ்விடத்தில் வைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூணில் வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நினைவு சுடரேற்ற, கூடியிருந்த பொதுமக்கள் அனைவரும் தங்கள் கைகளில் மெழுக்குவர்த்தியை ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்தினர். அதேபோல், சிங்கள ராணுவத்தினரால் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாலகன் பாலசந்திரன் புகைப்படத்திற்கு தலைவர்களும் பொதுமக்களும் மலர் தூவி மரியாதை செலுத்தியதோடு, ஏந்திய மெழுகுவர்த்திகளை அவர் படத்திற்கு முன்பாக வைத்து சென்றனர். தமிழீழம் ஒன்றே ஒரே தீர்வு, அதற்காக உயிரையும் கொடுக்க தயாராக இருப்பதாக வைகோ அவர்களும், தமிழீழம் அண்டை நாட்டு பிரச்சனை அல்ல அது தமிழர் பிரச்சனை, இலங்கையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள அனுர திசநாயக அரசும் சிங்கள பேரினவாதத்தின் தொடர்ச்சியாக உள்ளது என்று திருமுருகன் காந்தி அவர்களும் செய்தியாளர்களிடையே கூறினர். தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட தமிழீழத்திற்கு ஆதரவான முழக்க அட்டைகளை ஏந்திய மக்கள் உணர்ச்சிமிகுந்து காணப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *