ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்ட் வந்தடைந்தது சென்னை மக்கள் மகிழ்ச்சி !!

சென்னை தமிழகம்

ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து  விநாடிக்கு 1200 கன அடி திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லை வந்தடைந்தது..

சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர-தமிழக அரசுகளின் ஒப்பந்தத்தின் படி, ஆண்டிற்கு 2 தவணைகளாக, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் வழங்க வேண்டும்.

கடந்த பருவத்தில், கண்டேறு அணையின் நீர் இருப்பு குறைவாக இருந்ததால், சென்னைக்கு தண்ணீர் வழங்குவதை ஆந்திர அரசு நிறுத்தியது. ஆந்திராவில் பெய்த கன மழையால், ஸ்ரீசைலம் அணை நிரம்பியதை அடுத்து அதிலிருந்து தெலுங்கு-கங்கா கால்வாயில் விநாடிக்கு 15000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் கண்டலேறு அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதால், சென்னைக்கு 1200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த நீரானது தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள ஜீரோ பாயிண்ட் வந்தடைந்தது. தமிழக எல்லைக்கு வந்தடைந்த கிருஷ்ணா நதி நீரை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பூக்கள் தூவி வரவேற்றனர்.

ஜீரோ பாயின்ட்டில் இருந்து தண்ணீர் பூண்டி ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பேபி கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு கொண்டு செல்லப்படும். அந்த தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு பின்னர் சென்னை குடிநீருக்காக வழங்கப்படும் என தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *