லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் விஜய் மல்லையா இன்று திடீர் வருகை.!!
இங்கிலாந்து நாட்டில் நடந்து வரும் உலககோப்பை கிரிக்கெட் போட்டியை காண இந்திய வழக்குகளில் இருந்து தப்பி லண்டனில் வாழும் விஜய் மல்லையா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் பிரபலமான தொழிலதிபராக வலம் வந்தவர் விஜய் மல்லையா இவர் ஐ.பி.எல் போட்டிகளில் பெங்களூரு அணியையும் ஏலத்தில் எடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று பெயரிட்டிருந்தார். எனினும், இந்திய பொதுத்துறை வங்கிகளில் மல்லையா வாங்கிய கடன் தொகை 9 ஆயிரம் கோடிக்கும் மேல் கட்டவில்லை என்று வங்கிகள் நெருக்கடி கொடுத்தன.
இதனால், இந்தியாவிலிருந்து தப்பிச்சென்ற விஜய் மல்லையா, தற்போது லண்டனில் வாழ்ந்து வருகிறார். எனினும், அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்துள்ளார்
இந்த நிலையில், இன்று இந்தியா ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதும், உலககோப்பை லீக் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது.
இந்தப்போட்டியை காண்பதற்கு, விஜய் மல்லையா வந்தார். அவரை நிருபர்கள் சூழ்ந்து பேட்டி எடுக்க முயன்றனர் அதற்கு அவர் நான் இங்கு கிரிக்கெட் பார்க்கவே வந்தேன் என்று கூறி பேட்டியை தவிர்த்து மைதானத்துக்குள் சென்று விட்டார். திடீரென அவர் வருகை கண்டு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர்