பிக் பாஸில் கலந்து கொண்டதற்காக கூடுதல் சம்பளம் தர வேண்டும், இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என நடிகை மதுமிதா மிரட்டுவதாக விஜய் டிவி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் மூன்றாவது சீசனில் முக்கிய போட்டியாளராக விளங்கியவர் நடிகை மதுமிதா. 50 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்த அவர், மாதிரி கருத்து கணிப்பில் டைட்டில் வின்னர் பட்டியலில் 3வது இடத்தை பிடித்திருந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்கில் மதுவுக்கும் மற்ற ஹவுஸ்மேட்ஸ்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினையாக மாறியது. மதுமிதா வெளியேற்றம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுமிதா கத்தியால் தனது கையை அறுத்துக்கொண்டார்.
இதனால் அவரை நிகழ்ச்சியில் இருந்து உடனடியாக வெளியேற்றினார் பிக் பாஸ். வெளியே வந்த மதுவிடம் பேசிய சிலர் சொன்ன தகவலின்படி, கர்நாடக காவிரி பிரச்சினை தொடர்பாக மது கருத்து கூறியது தான் பிரச்சினைக்கு காரணம் என தெரியவந்தது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக மதுமிதா சார்பில் எதுவும் பேட்டி கொடுக்கப்படவில்லை. கமல் முன்னிலையில் பேசும் போது கூட பட்டும், படாமலும் தான் அவர் பேசினார். இதனால், எதற்காக மது இப்படி அவசரப்பட்டு முடிவெடுத்தார் என மக்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுமிதா மீது விஜய் டிவி சார்பில் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டார் விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் இந்த புகாரை அளித்துள்ளார். அந்தப் புகாரில், ‘மதுமிதா அதிக சம்பளம் கேட்டு தங்களுக்கு தொடர் டார்ச்சர் கொடுப்பதாகவும், தற்கொலை செய்துகொள்வேன்’ என மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், ‘விஜய் டிவியில் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் -3 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மதுமிதா தன்னை காயப்படுத்தி கொண்ட காரணத்தினால் 50 நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் செல்லும் போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் கூறியபடி மதுமிதா, ஏற்கனவே 11,50,000 பெற்றுள்ளார். மீதமுள்ள ஒரு நாள் 80,000 ரூபாய் வீதம் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்தோம். அதை ஒப்புக் கொண்டு சென்றார்.
ஆனால், கடந்த 19ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு மதுமிதா வாய்ஸ் மெசேஜ் மூலமாக மிரட்டல் விடுத்துள்ளார். அதில், தனக்கு தர வேண்டிய பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்’ என அவர் கூறியிருக்கிறார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மதுமிதா கையை அறுத்துக் கொண்ட விவகாரம் பெரிய பிரச்சினையாக உருமாறிய நிலையில், விஜய் டிவி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.