ஜம்மு காஷ்மீரில் நடந்த நீர் மற்றும் பேரிடர் மேலாண்மை கருத்தரங்கத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார்.!!
ஜம்முவில் மத்திய அரசின் ‘ஒரே இந்தியா சிறப்பான இந்தியா’ திட்டத்தின் கீழ் அண்மையில் நடைபெற்ற இரண்டு நாள் கருத்தரங்கில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார்.
‘ஒரே இந்தியா சிறப்பான இந்தியா’ திட்டத்தின் கீழ் ‘நீர் ஆற்றல் மற்றும் பேரிடர் மேலாண்மை’ என்னும் தலைப்பில் ஜம்முவில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இணைந்து நீர் ஆற்றல் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைகள் குறித்த அனுபவங்களையும், இந்த துறைகளில் இணைந்து பணியாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
கருத்தரங்கில் கலந்துகொண்டு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:
இந்தக் கருத்தரங்கத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் குறைந்த அளவிலான நீரினை வீடு, விவசாயம் மற்றும் இதர பயன்பாட்டுக்கு பயன்படுத்துதல், நகரங்களில் வெள்ளப் பாதிப்புகளை எப்படி குறைப்பது, பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிப்புகளை எப்படி குறைப்பது, பாதிப்புகளில் இருந்து மீள்வது ஆகியவற்றுக்கு உதவியாக இருக்கும் நமது நாட்டில் உள்ள நிலப்பகுதிகள் நிலநடுக்கத்தாலும், வெள்ளத்தாலும் பாதிக்கக்கூடியவை. கடற்கரைப்பகுதி சூறாவளி, சுனாமியால் பாதிக்கப்படக்கூடியவை. விவசாய நிலப்பகுதிகள் வறட்சியாலும், மலைப்பாங்கான பகுதிகள் நிலச்சரிவு, பனிப்பாறைச் சரிவுகளாலும் பாதிக்கப்படுகின்றன.
தமிழ்நாடும் பல பேரிடர்களால் பாதிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் கஜா, ஒக்கி, நீலம், தானே, ஜல், நிஷா உள்ளிட்ட புயல்களால் பாதிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் சமயங்களில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பாராட்டியது.
மழைநீர் சேகரிப்பு, பேரிடர் மேலாண்மை, குடிமராமத்து, குளங்களைத் தூர்வாருதல், குடிநீருக்கான கூடுதல் ஆதாரங்களை கண்டறிதல் உள்ளிட்ட பணிகளுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
இந்தக் கருத்தரங்கில் தமிழக அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.