அமர்நாத் பனிலிங்க தரிசனம் கோலாகலத் தொடக்கம் முன்னாள் அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு !!
பிரம்மா குமாரிகள் அமைப்பின் 84 ஆவது ஆண்டுவிழா மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு 12 ஜோதிர்லிங்கம் மற்றும் அமர்நாத் பனிலிங்க தரிசன நிகழ்வு சென்னை ICF அருகே உள்ள RPF பரேடு மைதானத்தில் இன்று காலை தொடங்கியது.
முன்னாள் அமைச்சர்கள் திரு.பொன்னையன், திருமதி.கோகுல இந்திரா, அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.மோகன், நகைச்சுவை நடிகர் திரு.செந்தில் ஆகியோர் கண்காட்சி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கொடி மரத்தில் பிரம்மா குமாரிகள் இயக்க சிவ பரமாத்மாவின் கொடியை ஏற்றிவைத்தனர் .
பின்னர் திரு.பொன்னையன் அவர்கள் அமர்நாத் பனிலிங்க குகையை திறந்து வைத்தார்.
அமர்நாத்தில் பனிலிங்கம் எப்படி குகைக்குள் அமைந்துள்ளதோ அதேபோன்று குகை மற்றும் குளிர்சாதன வசதியுடன் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் லிங்கம், ஆந்திர மாநிலம் ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜுனர் லிங்கம், மத்திய பிரதேசம் உஜ்ஜயினியில் உள்ள மஹாகாளேஸ்வர் லிங்கம், மத்திய பிரதேசம் ஓங்காரேஸ்வரர் லிங்கம், மகாராஷ்டிரா மாநிலம் பரளியில் உள்ள வைத்தியநாதேஸ்வரர் லிங்கம், மகாராஷ்டிரா மாநிலம் புனேவிற்கு அருகே சகாயத்ரி மலைத்தொடரில் அமைந்துள்ள பீமா ஷங்கர் லிங்கம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி லிங்கம், குஜராத் மாநிலம் நாகேஸ்வரர் லிங்கம், உத்திரபிரதேச மாநிலம் காசி விஸ்வநாத லிங்கம், மகாராஷ்டிரா மாநிலம் திரியம்பகேஸ்வரவர் லிங்கம், உத்திரகாண்ட மாநிலத்தில் உள்ள கேதார்நாத் லிங்கம், மகாராஷ்டிரா மாநிலம் தொளலதாபாத் அருகே உள்ள கிரிஸ்னேஸ்வர் லிங்கம் மற்றும் அமர்நாத் பனிலிங்கம் ஆகிய 13 லிங்கங்களின் தத்ருப தரிசனத்தை பொது மக்களுக்கு காட்சிப்படுத்துவதே இந்த ஜோதிர்லிங்க தரிசனத்தின் சிறப்பாகும்.
இந்த 13 லிங்கங்களையும் அந்தந்த ஊரில் நேரில் சென்று தரிசிக்க விரும்பினால் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பல மாத காலமும் பல லட்ச ரூபாய் செலவும் ஏற்படும். மேலும் இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதியில் அமைந்துள்ள அமர்நாத் பனிலிங்கம் போன்ற ஆன்மிக தலங்களை தரிசித்தல் என்பது எல்லா கால கட்டத்திலும் எல்லா வயதினருக்கும் சாத்தியமும் இல்லை.
ஆனால் இவ்வளவு காலத்தையும் பொருளாதாரத்தையும் மிச்சப்படுத்துவதோடு மட்டுமின்றி அனைத்து வயதினரும் இந்த அனைத்து ஆன்மிக தலங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பை இந்த தத்ரூப தரிசனம் ஏற்படுத்தி தரப் போகிறது மேற்கண்ட தலங்களுக்கு சென்றால் என்ன வகையான ஆன்மிக அதிர்வுகளை உணர முடியுமோ அதே அளவு ஆன்மிக அதிர்வுகளை இந்த தத்ருப தரிசனத்தில் பொது மக்கள் உணரலாம்.
இந்த பனிலிங்க தரிசன வளாகத்தில் தியானம் செய்வதற்கான தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது நகைச்சுவை நடிகர் செந்தில், முன்னாள் IAS அதிகாரி சிவகுமார் சுவாமிகள், முன்னாள் அமைச்சர் திரு.பொன்னையன் ஆகியோர் தியான அரங்கில் குத்துவிளக்கு ஏற்றினர்.
அப்போது பேசிய திரு பொன்னையன், தானும் தமது குடும்பத்தினரும் பிரம்மா குமாரிகள் இயக்கத்தில் பல ஆண்டுகளாக தொடர்பில் உள்ளதையும், அபு மலையில் சிறப்பு பயிற்சி பெற்றதையும் பெருமையுடன் தெரிவித்தார்.
மதங்கள் சாதிகள் ஏதுவாக இருந்தாலும் இறைவன் ஒன்றுதான் என்ற தத்துவத்தை பிரம்மா குமரிகள் அமைப்பு உணர்த்துகிறது என்றும் அவர் கூறினார் .
இந்த ஜோதிர்லிங்க தரிசனத்தில் பொதுமக்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எனது தமிழ்நாடு போதையற்ற தமிழ் நாடு என்ற தலைப்பில் போதை விழிப்புணர்வு அரங்கம், இளைஞர்கள் முன்னேறுவதற்குரிய வழிகளை கூறும் அரங்கம், ஆன்மிகத்திற்கும் அறிவியலுக்கும் உள்ள தொடர்பை கூறும் அரங்கம், தண்ணீரின் இன்றியமையாமை மற்றும் தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் அரங்கம், பிரம்மா குமாரிகள் வரலாற்று அரங்கம், மற்றும் புத்தக அரங்கம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன
புத்தக அரங்கில் 5 ரூபாய் விலைக்கே அரிய நூல்கள் கிடைக்கின்றன.
கண்காட்சியின் திறந்தவெளி அரங்கில் அபிஷேக லிங்க தரிசனம் ஒளி ஒலி காட்சியாக நிகழ்த்தப்படுகிறது.
மாலை நேரங்களில் தேவிகளின் தத்ருப தரிசனம் என்ற மக்கள் மனம் கவரும் அற்புத நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி விசாலாக்ஷி, துர்கை, மகிஷாசுரமர்த்தினி , கன்னியாகுமாரி, சரஸ்வதி, சந்தோஷி மாதா, மற்றும் மாரியம்மன் ஆகிய 9 பெண் தெய்வங்களை போல உடை நகை அலங்காரங்கள் மற்றும் கிரீடம் போன்றவற்றை தரித்தும் அந்தந்த தெய்வங்களுக்குரிய வாகனங்கள் மீது அமர்ந்தும் ஒளி வெள்ளத்துக்கிடையே இந்த ஆன்மிக கலைநிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மேலும் சிவபெருமான், பார்வதிதேவி, விநாயகர், முருகர் மற்றும் நந்திதேவர் உள்ளிட்டோர் இடம்பெறும் திருக்கைலாய காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் பாரதநாட்டியம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன
முதல் நாளான இன்று நீதியரசர் திரு வள்ளிநாயகம், நீதிபதி திரு பாலசுப்ரமணியம் வணிகர் சங்க தலைவர் திரு.வெள்ளையன் உள்ளிட்டோர் ஜோதிர்லிங்க தரிசனத்தை கண்டு களித்தனர். பொது மக்கள் பெருமளவில் டும்பம் குடும்பமாக தரிசன நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
வரும் 24 ஆம் தேதி வரை ஜோதிலிங்க தரிசனம் நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை பொது மக்கள் இலவசமாக தரிசனம் செய்யலாம்.