சிங்கப்பூரில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர் இறக்குமதி.!!!

மருத்துவம்

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, கொரோனா பரவலின் 2-வது அலையால், தற்போது நிலவி வரும் ஆக்சிஜன் மற்றும் அதன் தொடர்புடைய சாதனங்களின் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) போதிய அளவு ஆக்சிஜன் சாதனங்களை கொள்முதல் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதன்படி சிப்காட் நிறுவனம் சிங்கப்பூர், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் துபாயில் இருந்து 1,915 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 2,380 ஆக்சிஜன் முறைப்படுத்தும் கருவிகள், 3,250 ஆக்சிஜன் ஓட்ட அளவு கருவிகள், 5,000 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 800 ஆக்சிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் என மொத்தம் ரூ.40.71 கோடி அளவிற்கு இறக்குமதி செய்து வருகிறது.

சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி

சிப்காட் நிறுவனம், தனது தொழில் பூங்காக்களின் அருகில் அமைந்திருக்கும் தொழிற்பிரிவுகளில் இருந்து 2,000 ஆக்சிஜன் சிலிண்டர்களை பெற்றுள்ளது. இவை அனைத்தும் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

தற்போது இந்திய தொழில் கூட்டமைப்பு, தமிழக அரசுடன் இணைந்து சிங்கப்பூரில் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் 1,000 ஆக்சிஜன் சிலிண்டர்களை இறக்குமதி செய்ய ஆணை வழங்கியதில், 750 ஆக்சிஜன் சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஓரிரு தினங்களில் இறக்குமதி செய்யப்பட உள்ளது.

8 மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு

இந்திய தொழில் கூட்டமைப்பால் முதற்கட்டமாக இறக்குமதி செய்யப்பட்ட 750 ஆக்சிஜன் சிலிண்டர்களில் சேலம் மாவட்டத்திற்கு 125, கோவை மாவட்டத்திற்கு 100, ஈரோடு மாவட்டத்திற்கு 100, திருவள்ளூர் மாவட்டத்திற்கு 100, காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு 100, வேலூர் மாவட்டத்திற்கு 75, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 75, திருப்பூர் மாவட்டத்திற்கு 75 என மொத்தம்8 மாவட்டங்களுக்கு கொரோனா சிகிச்சை பயன்பாட்டிற்காக வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு அந்த வாகனங்களைகொடியசைத்து அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காந்தி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருண் ராய், சிப்காட் மேலாண்மை இயக்குனர் ஜெ.குமரகுருபரன், இந்திய தொழில்கூட்டமைப்பின் தென் பிராந்தியத் தலைவர் சி.கே.ரங்கநாதன், அதன்தமிழக தலைவர் எஸ்.சந்திரகுமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *