வேலூர் சைதாப்பேட்டை மலைக்கு அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் நேற்று சென்றனர். அப்போது மலைக்கோட்டைக்கு செல்லும் பாதையில் பீரங்கி மண்ணில் புதைந்த நிலையில் தென்பட்டதை பார்த்தனர் .இந்த தகவலை அவர்கள் மலையில் இருந்து இறங்கியதும் ஊரில் தெரிவித்தனர். இது அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. அதை தொடர்ந்து சிலர் அங்கு சென்று அந்த பீரங்கியை சுற்றி இருந்த மண்ணை அகற்றினர்.
இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பீரங்கி கண்டெடுக்கப்பட்டது குறித்து தகவல் வந்தது. ஆனால் நேரில் பார்க்கவில்லை. எனவே, அதனை நேரில் சென்றுபார்வையிட்டு, அதை கீழே கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட பீரங்கிகள் வேலூர் கோட்டை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜலகண்டேஸ்வரர் கோவிலின் இடதுபுறம் உள்ள கோசாலையில் பீரங்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.