இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் சீருடை அறிமுகம் செய்துள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள நிலையில், இந்திய வீரர்களின் புதிய டெஸ்ட் சீருடை புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர், மேற்கிந்திய தீவுகளில் உள்ள ஆண்டிகுவாவில் நாளை தொடங்கவுள்ளது. இந்நிலையில், பிரத்யேக எண்கள் மற்றும் வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டஇந்திய அணிக்கான டெஸ்ட் கிரிக்கெட் சீருடை புகைப்படங்கள் இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், கேப்டன் விராட் கோலி, ரஹானே, ரிஷப் பந்த் உள்ளிட்டவர்கள் புதிய சீருடையை அணிந்தபடி தோன்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இந்திய அணியை பொருத்தவரையில், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கான ஆடைகளில் மட்டுமே இதுவரை பிரத்யேக எண்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. தற்போது டெஸ்ட் சீருடையும் அப்பட்டியலில் இணைந்துள்ளது.