100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளம்.. 324 பேர் பலி.. உதவி கேட்கும் கேரள முதல்வர்.
கேரள வெள்ள நிவாரண நிதிக்கு தமிழ் நடிகர்களின் பங்களிப்பு ..
கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
தொடர் கனமழையால் ஆறுகள், ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. அணைகள் திறக்கப்பட்டுள்ளதால் பல பகுதிகளில் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது.
இதனால் ஏராளமான வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு மீண்டும் மழை பெய்துவருவதால் 13 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.*
கொச்சி விமான நிலையம் 26ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ உட்பட கேரள மாநிலத்தில் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 324 பேர் பலியாகியுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். காலையில் 164 பேர் பலியாகியிருப்பதாக அவர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
2,23,139 பேர் 1500க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ள பாதிப்பை கேரளா சந்தித்திருப்பதாகவும் பினராயி விஜயன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உங்களின் உதவி பாதிப்பப்பட்டவர்களின் மீண்டும் நிலைப்படுத்தும் என்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளியுங்கள் என்றும் கேரளமுதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.