ஆட்டோ டிரைவரை வீடு தேடி சென்று சந்தித்தார் தமிழிசை சவுந்திரராஜன் .!!
பாஜகவினரால் தாக்கப்பட்ட ஆட்டோ டிரைவரை வீடு தேடி சென்று சந்தித்து ஆறுதல் கூறினார் தமிழிசை சவுந்திரராஜன்.
சென்னையில் ஜாபர்கான்பேட்டை அருகே விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டார்.
அப்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து ஆட்டோ டிரைவர் கதிர் கேள்வி எழுப்பிய போது நமட்டு சிரிப்பு சிரித்தார் தமிழிசை. இதையடுத்து பாஜகவினர் கதிரை பிடித்து நெம்பி தள்ளி கடுமையாக தாக்கினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவினரால் அந்த ஆட்டோ டிரைவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பெரும்பாலானோர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் ஆட்டோ டிரைவரின் வீட்டுக்கு பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நேரில் சென்று பாராட்டினார்.
அப்போது அவர் தனது பக்கத்தில் கதிரை உட்காருமாறு கூறினார். குடும்பத்தினருக்கு இனிப்பு வழங்கினார். மேலும் கதிர் கேட்ட கேள்வியில் தவறில்லை என்றும் கூறியிருந்தார்.
ஒரு ஆட்டோ டிரைவரை பாஜக நிர்வாகிகள் தாக்கினர் என்ற சம்பவத்தை அறிந்த தமிழிசை அவரை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தது பாராட்டுதலுக்குரியது, ஆரோக்கியமான சூழலுக்கும் வழிவகுக்கும். இது தொடர்பான வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் தமிழிசை வெளியிட்டுள்ளார்.